Thursday, December 29, 2005

தமிழ் வலைத்திரட்டிகள் ...

தமிழில் வலைப்பதிவுகள் நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில் வலைத்திரட்டிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. வலைப்பதிவுகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழ்நிலையில் நல்ல வலைப்பதிவுகளை அடையாளங்காணவு்ம், ஆரோக்கியமான வலைப்பதிவுகள் பார்வையாளரை சென்றடையவும் நல்ல வலைத்திரட்டிகள் அவசியமாகிறது. போட்டிக்காக வலைத்திரட்டிகள் துவங்கப்படாமல் ஒரு வலைத்திரட்டியின் செயல்பாடுகளிலிருந்து பெற்ற அனுபவங்களின் மூலம் மற்றொரு வலைத்திரட்டி இன்னும் கூடுதல் சௌகர்யத்தோடு பிறந்தால் வலைப்பதிவுலகிற்கு நல்லது.

சரி சமீப காலமாக உலா வரும் சில வலைத்திரட்டிகள் குறித்த தகவல்...

1. தேன்கூடு

850 வலைப்பதிவுகள் வரை திரட்டப்பட்டுள்ள இந்த திரட்டியில் பதிவுகளை வகைப்படுத்தும் வாய்ப்பும், அன்று வெளியான பதிவுகளின் விபரம் முதல் பக்கத்திலேயே வெளியாவதும், பிடித்தமான வலைப்பதிவுகளை சேமிக்கும் வாய்ப்பும் நல்ல முயற்சி.

2. நந்தவனம்

தமிழ்மணத்திலிருந்து (அல்லது தமிழ்மணத்திற்கு பதிலாக) வெளிவரவிருக்கும் இந்த வலைத்திரட்டி தமிழ்மணத்தின் தற்போதைய வடிவத்தை விட நன்றாக இருந்தாலும் இன்னும் சிறப்பாக செய்யலாமென தோன்றுகிறது. வகைப்படுத்தப்படும் முறை, வாசகர் நல்ல பதிவுகளை பரிந்துரைக்கும் தற்போது முறையில் தோன்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு போன்றவையும் வந்தால் நன்றாகயிருக்கும்.

மேலும் கொஞ்ச நாளுக்கு முன் அறிவிப்பு வந்த முத்தமிழ்மன்றத்தின் வலைத்திரட்டி என்னானதென்று தெரியவில்லை...

பார்க்கலாம். வலைப்பதிவு திரட்டிகளிடம் நிலவும் இந்த ஆரோக்கியமான போட்டியினால் நமக்கு நல்ல பதிவுகளை அடையாளம் காணும் வாய்ப்பு கிட்டினால் யோகம்தான்..

சமீபத்தில் ரசித்த வலைத்தளம் இது. சென்னையை பற்றிய செய்திகளுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்தத்தளம் சென்னை பற்றிய நிறைய விவரங்களுடன் பல நல்ல புதினங்களையும் புகழ்பெற்ற நூல்களையும் இணையத்திலேயே கொண்டுள்ளது. நல்ல முயற்சியாக தோன்றுகிறது ,. ...

செய்திகள் வாசிப்பது ...

இப்போதெல்லாம் நான் பொதுவாய் வீடு திரும்பும் நேரங்களில் மெகா தொடர்களும், TV பார்க்கும் எண்ணத்தையே போக்கிவிடும் நேரடி தொலைபேசி நிகழ்ச்சிகளும் அதிகமாய் ஆக்கிரமித்திருப்பதால் ( வழியேயின்றி ???) செய்தி சேனல்கள் தான் ஒரே புகலிடமாய் இருக்கிறது.

ஏற்கனவே 24 மணி நேரமும் செய்திகளை வழங்கி களத்திலிருக்கும் NDTV, HeadlinesTodayவுக்கு போட்டியாக சமீபத்தில் ஒளிபரப்பை துவங்கிய சி.என்.என் - ஐ.பி.என் அலைவரிசையை கடந்த இரண்டு நாட்களாகத்தான் பார்க்க நேர்ந்தது. ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் NDTVல் பார்த்த பழகிய முகங்கள், NDTVயை ஒத்த அமைப்பு என்றிருப்பதால் இப்போதைக்கு பெரிய அளிவிலான வித்தியாசமெதுவும் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில் கால் பதிக்க விரும்பிய CNNனுடனான ஒப்பந்தம் உலக அளவிலான செய்திகளை விரிவாய் உடனுகுடன் தரும் வாய்ப்புள்ளதால் இந்திய செய்திகளில் தரமும் போட்டியை சமாளிக்கும் ஆற்றலுமிருந்தால் செய்தி அலைவரிசைகளில் CNN - IBMகோலுச்சலாம். ஆனால் நேற்றைய நிகழ்வுகளை (Shooting @ IISC ) பற்றி செய்திகளை தருவதில் ஒருவித பதட்டம் செய்தி அறையில் இருந்தவர்களுக்கும், சம்பவ இடத்தில் இருந்து செய்தியளித்த நிருபருக்கும் இருந்தது இப்பொழுதே முதலிடத்துக்கும் வரத்துடிக்கும் அவசரத்தை சொல்லியது. கம்யூனிச கொள்கைகளுக்கு ஆதரவான நிலையெடுத்து அதனால் காங்கிரஸிற்கும் ஆதரவான நிலையிலிருக்கும் NDTVகும் ( உதா: நட்வர்சிங் விவாகரத்தில் அவருக்கு ஆதாரவான நிலையெடுத்து பின்னர் சமாளித்தது..), என்னதான் மறைக்க முயன்றாலும் பா.ஜ.கவுக்கு ஆதரவான நிலையெடுக்கும் இந்தியா டுடே குழுமத்தை சார்ந்த HeadlinesTodayவுக்கும் மத்தியில் கட்சி சார்பற்ற நிலையெடுத்து நடுநிலையான செய்திகளை வியாபர நோக்கத்தோடு அதிகபடுத்தாமல் மக்களுக்கு வழங்கினால் CNN-IBN முதலிடத்தை அடையலாம்.

பொதுவாக இரவு 9.00 மணி செய்திகளை பார்க்க தவறவிட்டால் அடுத்த (ஆங்கில) செய்திகள் மறுநாள் காலை 8.00 மணிக்குத்தான், இடைப்பட்ட நேரத்தில் செய்திகளை தெரிந்து கொள்ள கால்மணி நேரம் ஒலிக்கும் வானொலி செய்திகள் இல்லையென்றால் முந்தின இரவு வரையிலான பரபரப்பு செய்திகளை தாங்கும் நாளிதழ்கள் என்றிருந்த காலம் போய், பரபரப்பான செய்திகளை பரபரப்போடு அந்த நிமிடமே வழங்க ஏகப்பட்ட சேனல்கள் களத்திலிறங்கிருப்பது தகவல் தொழில்நுட்பத்தின் அமானுஷ்ய வளர்ச்சியை காட்டுகிறது. இன்னும் இந்தக்களத்தில் போட்டியில் இறங்க ஏகப்பட்ட நிறுவனங்கள் ஆர்வத்தோடு இருப்பது நல்ல அறிகுறியே ....

செய்தி சேனலகளின் இந்த அதீத பசியால் சில சமயங்களில் அவர்களே பரபரப்பான செய்திகளை உருவாக்குவதும் ( தெகல்கா, சமீபத்திய ஆபரேசன் துரியோத்னா..) நாட்டின் கடைக்கோடியில் நடக்கும், நடந்த சில நிகழ்வுகளும் கண்டுகொள்ளப்பட்டு (ஆபரேசன் மஜ்னு, தில்லி காவல்துறை ஆய்வாளர் தற்கொலை செய்தவரின் உடலை ஒப்படைக்க கேட்ட லஞ்சம் பற்றிய செய்தி, கடந்த வாரம் பீகாரில் மருத்துவமனையில் கேட்கப்பட்ட லஞ்சம் குறித்த செய்தி..) ஆட்சியாளர்களின் பார்வைக்கு செல்லும் வாய்ப்பையும் அளிப்பது செய்தி சேனல்களின் வளர்ச்சியாலும் போட்டியினாலும் வரும் ஆதாயங்கள். அதே நேரத்தில் போட்டியினால் முன்னாள் குடியரசுத்தலைவரின் உடல்நிலை குறித்து தவறான தகவல் அளித்து பின்னர் மன்னிப்பு கேட்ட நிகழ்வும், சிறு சிறு விபத்துகளைக்கூட தீவிரவாத தாக்குதல்களாக செய்தி அளித்து பரபரப்பாக்க நினைத்து ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பிரச்சனை உண்டாக்கும் அபாயமமும் அதிகம்.

நடுநிலைமையோடு நம்பகத்தன்மையான செய்திகளை அளித்தால் செய்தி அலைவரிசைகள் பொழுதுபோக்கு அலைவரிசைகளைக்காட்டிலும் அதிக அளவிலான ஆரோக்கியமான பார்வையாளர்களை உருவாக்க முடியும் என்பதே என் கருத்து

(பி.கு: தமிழில் செய்தி வழங்கும் சில அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளை நான் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாகவே கருதுவதால் அவற்றை என் பதிவில் கண்டுகொள்ளவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ...)

Wednesday, December 21, 2005

2005 - இந்திய சாதனையாளர்கள் …

2005ஐ பொறுத்தளவில் இந்தியாவுக்கு சோதனையான காலகட்டங்களை விட சாதனையான காலகட்டங்களே அதிகமாக நிகழ்ந்திருக்கின்றன. அரசியலில் தொடங்கி ஆராய்ச்சி, பொருளாதாரம், அயல்நாட்டுடனான உறவு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் சாதனையை எட்டியிருக்கிறோம். வளர்ந்த நாடுகள் இந்தியாவின் வளர்ச்சியில் கண் கொண்டிருப்பதும், உலகளாவிய முடிவுகளில் இந்தியாவின் குரல் எடுபட தொடங்கியிருப்பதும் சமீப காலங்களாகவே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகு நிகழ்வுகள் 2005ல் அதிகமாக நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சியான செய்தியே.

2005ன் இந்திய சாதனையாளர்கள் குறித்து பதிவிடலாம் என நினைத்து பட்டியிலிட்டதில் முதல் ஐந்து சாதனையாளர்களாக நான் கருதியனவற்றை இங்கே விவரித்திருக்கிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ....

5. அமிதாப்பச்சன்


இந்திய திரையுலகில் இரண்டாம் இன்னிங்ஸில் எவ்வளவு திறமை வாய்ந்த நபரையாயிருந்தாலும் தாக்கு பிடித்து முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது குதிரைக்கொம்பு. ஆனால் முதல் இன்னிங்ஸைப்போலவே இரண்டாம் இன்னிங்ஸிலும் வெற்றிக்கொடி நாட்டியது அமிதாப் மட்டுமே. (மாபெரும் கலைஞனான சிவாஜியை கூட நாம் வீணடித்துவிட்டது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மையே!!). இந்தியாவின் மிகவும் பிஸியான மனிதர்களுள் ஒருவரான அமிதாப் உடல்நலம் குன்றிய போது தேசமே படபடத்தது இதற்கு சான்று. அவருடைய மகன் அபிஷேக்குடன் கூட ஜோடி சேர தயங்கும் நடிகைகள் இவருடன் நடிக்க துடிப்பதும், பொதுவாக விளம்பர உலகில் கொடிகட்டி பறக்கும் விளையாட்டு வீரர்களை விட அதிகமாய் விளம்பர உலகை இவர் ஆக்கிரமித்திருப்பதும், கௌன் பனேகா குரோர்பதி என தொலைக்காட்சி உலகையும் ஆக்கிரமித்திருப்பதும் அமிதாப் மீண்டும் சாதனையாளராய் மின்னத்தொடங்கியிருப்பதற்கு சான்று ....

4. சானியா மிர்சா

கிரிக்கெட்டின் மீது வெறி கொண்ட நாட்டில் வேறொரு விளையாட்டு வீராங்கனைஇதயத்துடிப்பையெல்லாம் பறித்துக்கொண்டு ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பி சாதித்திருப்பது இந்தியாவில் டென்னிஸுக்கு புத்துயிர் அளித்திருக்கிறது. இந்த வருட தொடக்கதில் டென்னிஸ் தரவரிசையில் 169 வது இடத்திலிருந்த இவர் வருட இறுதியில் 35வது இடத்திற்குள் வந்திருப்பது மிகப்பெரிய சாதனையே. ஹைதராபாத் ஓபனில் பட்டம், ஆஸ்திரிலேய ஓபனில் மூன்றாம் சுற்றுவரை சென்ற ஒரே இந்திய வீரங்கனை என்ற பெருமை, யு.எஸ் ஒபனில் நான்காவது சுற்றுவரை சென்றது, ஒற்றையர் பிரிவில் முதல் 50வது தரவரிசைக்குள் வந்த முதல் இந்தியரேன சாதனை வருடத்தில் சாதனைகளை அள்ளிக்கொண்டார். உடை குறித்த சர்ச்சை, கற்பு குறித்து தெரிவித்தாக கூறப்பட்ட செய்திகளால் எழுந்த பரபரப்புகள் ஆகியவை குறித்து அதிக கவலை கொள்ளாமல் ஆட்டத்தில் கவனமாயிருக்கும் இவர் 2006ல் முதல் பத்து இடங்களுக்குள் வந்தால் டென்னிஸ் இந்தியாவில் இன்னும் கூடுதல் கவனத்தைப்பெறும்

3. தேர்தல் ஆணையம்...


இந்தியாவைப் பொறுத்தளவில் தேர்தல் திருவிழாவில் எல்லா விதமான வேடிக்கைகளும் நடக்கும். பதவியைத்தக்க வைக்க , இழந்த பதவியை மீண்டும் அடைய கிடைக்கும் இந்த வாய்ப்பில் நடக்கும் அனைத்து கூத்துகளையும் இத்வரை வேடிக்கை பார்க்கும் அதிகாரமற்ற ஒரு பொம்மை அமைப்பாகவே இருந்துவந்த தேர்தல் ஆணையம் சமீபகாலமாக விசுவரூபமெடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. சமீபத்தில் முடிந்த பீகார் தேர்தல், தமிழகம் ,உத்திரபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிராவில் நடந்த இடைத்தேர்தல் என அரசியல்வாதிகள் மிகத்தீவிரமாயிருக்கும் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் மிகத்தீவிரமாயிருந்து மக்களும் ஊடகங்களும், சிற்சில நல்ல அரசியல்வாதிகளும் பாரட்டும் வகையில் நடந்துகொண்டு சாதனை கொண்ட தேர்தல் ஆணையத்திற்கு 2006ல் இன்னும் அதிகமாய் வேலையிருப்பது நிச்சயம் ...

2. தொழிற்துறை..

அயல்நாடுகளில் இந்திய தொழிற் நிறுவனங்கள் குறித்த கண்ணோட்டம் மாறியிருக்கிறது. இந்தியாவில் மூதலிடு லாபகரமாய் தோன்றத் தொடங்கியிருக்கிறது. இந்திய தொழிற் நிறுவனங்கள் மென்பொருள்துறை மட்டுமல்லாது ஏனைய துறைகளிலும் உலகளாவிய சந்தையிலுள்ள நிறுவங்களோடு போட்டிக்கு தயாராகி வருகின்றன. பங்குச்சந்தை அபார வளர்ச்சி பெற்று வருகின்றது. வருட துவக்கத்தில் 7000 புள்ளிக்கும் குறைவாயிருந்த சென்செக்ஸ், கடந்த பதினைந்து மாதங்களில் 2700 புள்ளிகள் வளர்ச்சியுற்று 9400 என்ற ரீதியில் வந்து நிற்கிறது. திறமான அரசியல், வளர்ந்து வரும் சமூகம், காலத்தின் கட்டாயம் என பல்வேறு காரணங்களிருப்பினும் தொழிற்துறையை பொறுத்தளவில் 2005 பொன்னான ஆண்டாகவே இருந்திருக்கிறது ....

1. ஊடகங்கள் ....

2005 பொறுத்தளவில் இந்தியாவில் ஊடகங்களுக்கிடையில் மிகப்பெரிய போட்டி உருவாகியிருக்கிறது. செய்திகளை வழங்குவதில் தொடங்கி, பார்வையாளனை தன் வசப்படுத்த மேற்கொள்ளும் உத்திகள் வரை போட்டி உச்சகட்டத்திலிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒருமுறையோ இரண்டு முறையோ, அதுவும் ஆளுங்கட்சிக்கெதிரான செய்தியென்றால் அது பற்றிய தகவலே தெரியாத காலம் போய் 24 மணி நேரமும் விழித்திருந்து செய்தி தர ஏராளமான நிறுவனங்கள் உருவாகிவிட்டன. ரங்கம் வெள்ளத்தில் தொடங்கி, பாகிஸ்தான் பூகம்ப நிலவரம் வரை, டில்லி காவல்துறை ஆய்வாளர் லஞ்சம் வாங்கிய காட்சியிலிருந்து பாரளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் வாங்கிய காட்சி வரை வேறு பட்ட கோணத்தில் உங்கள் வீட்டறையிலே காண்பிக்க நிறுவனங்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது. சமீபகாலமாய் பரபரப்பாக பேசப்படும் எனப்படும் வலைத்தளங்களோ பெரிய பெரிய நிறுவனங்களுக்கு பெருத்த சாவல்விடும் நிலையில் விசுவரூபமிட்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாளர்களான வானொலியும் செய்திதாள்களும் வளர்ந்து வரும் அறிவியல் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு களத்தில் தொடர்ந்து நீடிக்கின்றன.ஆனால் செய்தி நிறுவனங்களுக்கிடையே தன்னை களத்தில் நிலைப்படுத்த ந்டக்கும் இந்த இடைவிடாத யுத்தத்தால் சில நேரம் தவறான செய்திகள் மக்களை சென்றடையும் அபாயமிருந்தாலும் பலநேரத்தில் பயனுள்ள யுத்தமாகவே இருப்பது ஆரோக்கியமான செய்திதான்...

இந்தியாவின் இந்த சாதனையும், 2005 சாதனையாளர்களின் வெற்றியும் 2006லும் தொடர வேண்டும் ...

மீரட் கலகம் ...

இது 1857 சிப்பாய் கலகம் அல்ல. 2005ல் அத்துமீறிய சில காவலர்களால் வந்த கலகம். உத்திரபிரதேச மாநிலம் மீரத்திலுள்ள காந்தி பார்க்கில் அத்துமீறுபவர்களையும், ஈவ்-டீசிங்கில் ஈடுபவர்களையும் குறிவைத்து அம்மாநில காவல்துறை திங்களன்று நடத்திய "ஆபரேசன் மஜ்னு"வுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்கே (வழக்கமாய்) கூடியிருந்த இளைஞர்-இளைஞிகளை அடித்து , துன்புறுத்திய காட்சிகளை பத்திரிக்கைகளும், தொலைக்காட்சியினரும் வெளியிட்டதும், காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான ஒரு காதல் ஜோடி இன்னும் வீட்டிற்கு திரும்பாததும் காவல்துறையினருக்கு வலுவான எதிர்ப்பு கிளம்ப காரணமாயிற்று. (கலாச்சார காவலர்களாய் தங்களை காட்டிக்கொள்ள பத்திரிக்கைகளுக்கும் தொலைக்காட்சியினருக்கும் தங்களின் திட்டம் குறித்து தகவல் சொல்லியதே காவல்துறைதான் என்பது சுவராசியமான தகவல் !!!!) .மக்களவையிலும் ஒலித்த இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறை பெண் ஆய்வாளரும், துணை ஆய்வாளரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமை கமிஷனும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தபோவதாக அறிவித்துள்ளது .....

சிறிது காலம் முன்பு ஹோண்டா தொழிற்சாலையிலும் , சென்னையில் ஒரு ஹோட்டலிலும் அத்துமீறி கடும் கண்டனத்துக்கு உண்டான காவல்துறை மனித உரிமை குறித்து விழித்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டது

Monday, December 19, 2005

உங்கள் வோட்டு .....


Wednesday, December 14, 2005

நியூஸ் & வியூஸ் ...

1. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்த செய்தி
2. தலைவரின் சிவாஜி படப்பிடிப்பு துவக்கம்
3. பெங்களுர் பெங்களுரூ என பெயர்மாற்றம்

1. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் குறித்த செய்தி

"ஆபரேசன் துரியோதனா"வுக்கு பின் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கும் சம்பளம் , அனுபவிக்கும் சலுகைகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் தேடிக்கொண்டிருந்த போது கிடைத்த சுட்டி இது.

இன்று Rediffன் இந்த சுட்டி இதனை எளிமையாய் விளக்கியிருந்தது

ஆனாலும் கட்சிக்கு நிதி, தேர்தல் நேரத்தில் சீட் வாங்க டெபாஸிட், தேர்தல் செலவுகள், தலைவர் தொகுதிக்கு வரும்போது செய்யும் செலவுகள் என பண்ணிய முதலீட்டுக்கெல்லாம் வட்டி கட்ட கூட இந்த ஊதியமும் சலுகைகளும் பயன்படாத போது ....

2. தலைவரின் "சிவாஜி" படப்பிடிப்பு துவக்கம்

இன்று காலையிலிருந்து இந்தப்படம் என் மெயில் பாக்ஸிற்கு நூறு முறையாவது வந்திருக்கும்.

ரஜினியின் அடுத்த படமான சிவாஜியின் படபிடிப்பு இன்று துவங்கியதையொட்டி வெளியான புகைப்படமிது. நின்றாலும் நடந்தாலும் செய்தியாயிருக்கிற ரஜினியின் அடுத்த படம் அதுவும் ஷங்கர், ஏ,ஆர். ரகுமான், ஏ.வி.எம் என்ற பிரம்மாண்டமான கூட்டணியுடன் என்பதால் இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவு, சுஜாதா வசனம் (எஸ்டோரஜன், டெஸ்டோஸ்டிரான் என்றெல்லாம் தலைவர் பேச ..உம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்) , பீட்டர் கெய்ன் சண்டை பயிற்சி, குறிப்பாய் மீண்டும் வைரமுத்து என பட்டையை கிளப்பபோவது நிஜம். இனி குமுதம், விகடன், குங்குமம் எல்லாம் "சிவாஜி- வெளிவராத தகவல்கள், சிவாஜி- இந்தபடத்தின் உல்டாவா, ரஜினியுடன் நடித்தது நான் செய்த பாக்கியம்- சிவாஜியில் நடித்த (தலைவரின் அறிமுக பாடலில் ஐந்தாவது வரிசையில் தலைகாட்டிய) வளரும் நடிகை ஆனந்த கண்ணீருடன் பேட்டி" என வாராவாரம் சர்க்குலஷேனை அதிகரிக்கலாம். ஆனால் தீபாவளி வெளியீடு என்கிறார்கள். நிச்சயம் அவ்வளவு நாளெல்லாம் தாங்காது தலைவா !!!

3. பெங்களுர் பெங்களுரூ என பெயர்மாற்றம்

பெங்களுர் பெங்களுரூ என பெயர் மாற்றம் செய்ய கர்நாடக முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார்

ஏற்கனவே மெட்ராஸ் சென்னையாகவும், பாம்பே மும்பையாகவும், கல்கத்தா கொல்கத்தாவாகவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதும், உச்சரிப்பளவில் இந்த பெயர் மாற்றத்தில் பெரிய மாறுதல் இல்லையென்பதால் ஐ.டி சார்ந்த துறையினருக்கு பெரிய கஷ்டமெதுவுமிருக்காது என தோன்றுகிறது. ஆனாலும் இது போன்ற பெயர் மாற்றங்களின் மூலம் ஆட்சியாளர்கள் தங்களை மொழிக்காப்பாளர்களாக அடையாளம் காட்டுவதைத்தவிர வேறென்ன ஆதாயமிருக்கிறது என்பது புரியவில்லை.

இந்த பெயர் மாற்றத்தை கிண்டலடித்து ஆங்கிலத்தில் வெளிவந்த நான் ரசித்த பதிவு இது. அடுத்ததாக டெல்லி முதல்வர் இத்தகு முயற்சியில் ஈடுபட்டால் நிகழும் அரசியல் நிகழ்வுகளை நயமாய் கற்பனித்திருந்தார் ( கற்பனை + செய்திருந்தார் ??) ...

Monday, December 12, 2005

ஆபரேஷன் துரியோதனா..

"இங்கே மட்டும்தான் ஒருத்தன் தன் கடமையை செய்யறத்துக்கு லஞ்சம் கொடுக்கணும்" - இந்தியன் திரைப்படத்தில் வந்த பொதுமக்கள் அதிகமாக கைதட்டிய வசனமிது. இந்தக்கூற்றை இன்னொருமுறை மெய்ப்பித்திருக்கிறார்கள் மேன்மையான இந்திய பாரளுமன்ற உறுப்பினர்கள்

இந்தியா டுடே குழுமத்தின் ஆஜ்தக் (ஹெட்லைன்ஸ்டுடே) சேனல் கோப்ராபோஸ்ட் என்னும் இணையத்தளத்துடன் இணைந்து நடத்திய திட்டமிட்ட ஒரு நாடகத்தில், பாரளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்காக லஞ்சம் வாங்கிய காட்சிகள் இன்று காலை வெளியிடப்பட்டது. ஆபரேசன் துரியோதனா என்றழைக்கப்பட்ட இந்த திட்டத்தில் மொத்தம் 11 உறுப்பினர்களின் துகில் உரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் பாஜகவின் 6 உறுப்பினர்கள்,பி.எஸ்.பியின் மூன்று உறுப்பினர்கள், காங்கிரஸின் 1 உறுப்பினர், ஆர்ஜேடியின் 1 உறுப்பினரும் அடங்குவர்.

வட இந்திய சிறிய அளவிலான உற்பத்தியாளர்கள் சங்கம் (NISMA) என்று உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் எனக்கூறி அந்த அமைப்பிற்காக கேள்விகளை கேட்க நமது மண்ணின் மைந்தர்கள் 15,000 ரூபாய் முதல் 1,10,000 வரை லஞ்சமாக கேட்டிருக்கிறார்கள். மேலும் மாதம் 50,000 வீதம் வருடத்திற்கு 6,00,000 வரை பேரம் பேசிய பெருந்தகைகளுமுண்டு. இன்னும் ஒரு படி மேலாக லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்கள் விரும்பும் கேள்விகளை கேட்க 19 கையெழுத்திட்ட படிவங்களை கொடுத்து ஒதுங்கியிருக்கிறார் பா.ஜ.க உறுப்பினரொருவர். மேலும் இதுகுறித்த முழு செய்திக்கு இங்கே கிளிக்கவும்.

நட்வர்சிங் விவகாரத்தில் அவையையே ஸ்தம்பிக்க செய்த பாஜக எந்த அரசியல் ரீதியான சமாளிப்பு நடவடிக்கையில் இறங்காமல் உடனடியாக ஆறு உறுப்பினர்களையும் இடைநீக்கம் செய்திருக்கிறது. காங்கிரஸும், பகுஜன் சாமஜும் அத்தகு நடவடிக்கையை பின்பற்றியிருப்பது ஆறுதலளிக்கும் சேதி. இப்போதுவரை அரசின் விசாரணை குறித்த எந்த தகவலும் இல்லை. ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவித்துள்ள மக்களவை சபாநாயகர் மட்டும் உறுப்பினர்கள் உண்மை அறியும் வரை அவைக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

செய்தி நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க இது போன்ற எத்தகு முயற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்பதை உணர்ந்து பணத்தை கையில் வாங்காமல் சோபாவின் கீழ் வைக்க சொல்வது போன்ற ஆதிகாலத்து டெக்னிக்கை விடுத்து புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் மூலம் நம்ம வீட்டு பிள்ளைகள் தப்புவார்கள் என நம்பலாம்

Tuesday, December 06, 2005

முதல்வர் நிவாரண நிதிக்கான இணைய இணைப்பு ...

கடந்த சில நாட்களாக தமிழகத்தை படுத்திய மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்கள் பங்களிப்பை இணையத்தின் மூலமே வழங்க இயலும். ஆதலால் தொலைவிலிருக்கும் உதவும் எண்ணமுடைய நண்பர்களின் வசதிக்காக ...

முதல்வர் நிவாரண நிதிக்கான இணைய இணைப்பு


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

Help in a Timely manner however small is greater than the world

தவமாய் தவமிருந்து - விமர்சனம் தொடர்கிறது...

தவமாய் தவமிருந்து விமர்சனம் தொடர்கிறது...

படத்தின் கதைநாயகன் ராஜ்கிரண். அவர் தனது இரு குழந்தைகள் மேல் காட்டும் அலாதியான அன்பு, கிராமத்தின் பள்ளியில் கல்வியின் நிலையில் ஐயம் கொண்டு பக்கத்திலிருக்கும் சிவகங்கையிலிருக்கும் பெரிய பள்ளியில் கடன் வாங்கி சேர்க்கும் துடிப்பு. தினமும் சைக்கிளில் பிள்ளைகளையேற்றி பள்ளிவரை மிதிக்கும் தருணங்களில் களைப்பை நீக்க சாமி கதைகளையும் திருக்குறளையும் கூறி பிள்ளைகளுக்கு சிறு வயதிலெயே நன்னெறிகளை சொல்லும் யதார்த்த தந்தைகளை நினைவு படுத்துவது, பிள்ளைகளின் முன்னால் கடன் கொடுத்தவர் தகாத வார்த்தைகளை கூறியதால் ஏற்பட்ட அவமானத்தை உள்வாங்குவது, தீபாவளிக்கு வாங்கித்தருவதாக சொன்ன பொருள்களை வாங்க முடியாமல் வரும் இடையூறுகளின் போது காட்டும் பரிதவிப்பு, தன் மூத்த மகனின் உயர்படிப்புக்காக மீண்டும் கடன் வாங்க செல்லும்போது காட்டும் பாவம், இரண்டாவது மகனும் ஹாஸ்டலில் தங்கபோவதாக சொல்லும் போது காட்டும் சோகம், மூத்த மகன் வீட்டை விட்டு வெளியேறும்போது வெளிப்படுத்தும் வேதனை, ஓடிப்போன இரண்டாவது மகனுக்கு குழந்தை பிறந்த சேதி கேட்டு போகும் வேளையில் "ஏண்டா இப்படி செய்தே" எனும்போது அவ்வளவு நாள் மனதிற்குள் எறிந்த கோபக்கனலை அடக்கி ஞானி போல வெளிப்படுத்தும் பாங்கு, பின்னர் வீடு திரும்பும் மகனை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்து விட்டு நிற்பதிலும், இளையமகனின் பாசத்தில் நெகிழ்வதிலும், சிறு குழந்தைகளின் கொஞ்சலில் மகிழ்ச்சியுறுவதிலும், தன்னை சரியாக வளர்க்கவில்லை என்ற மூத்த மகனின் குற்றசாட்டில் நொடிந்து போவதிலும், இளைய மகனிடம் தான் தன் பொறுப்பினை ஒழுங்காக செய்தேனா எனக்கேட்பதிலும், அவன் கூறிய பதிலில் ஏதோ திருப்தியுற்று இறந்து போவது வரை மனிதன் என்னமாய் அசத்தியிருக்கிறார். பல விருதுகள் காத்திருக்கின்றன

அடுத்த முக்கிய கதாபாத்திரம் சரண்யா. குழந்தைகளிடம் அளவுக்கு அதிகமாய் பாசம் கொண்டு, கடன் வாங்கி செலவு செய்யும் கணவனிடம் பொய்க்கோபம் கொள்வதிலும், விடுமுறைக்கு வந்த பிள்ளைகளுக்கு பிடித்ததை செய்து கொடுக்க எண்ணி அது வேண்டுமா இது வேண்டுமா என ஆயிரம் கேள்விகள் கேட்பதிலும், தன் கணவனை எதிர்த்து பேசும் மூத்த மருமகளிடம் பாய்வதிலும், ஒடிப்போன மகன் வீடு திரும்பும்போது பாசத்தை அடக்கி கோபத்தில் கதவை மூடுவதிலும், பின்னர் சிறு குழந்தையின் அழுகுரலில் மனமிறங்கி கொஞ்சுவதிலும் ஒரு கிராமத்து தாயாகவே வாழ்ந்திருக்கிறார்.

நாயகன் சேரனும் நாயகி பத்மப்ரியாவும் தங்கள் பாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். காதலிப்பதிலும், இளமை மீறி பின்னர் அது குறித்து வருந்துவதிலும், சென்னையில் வாழ்க்கையை உணர்வதிலும், காதலிக்கும் இளைஞர் இளைஞிகளுக்கு ஒரு முன்னுதரணமாக இருக்கும். சேரனின் நடிப்பில் முதிர்ச்சி தென்படுகிறது. ஆனால் அடிக்கடி குலுங்கி குலுங்கி அழுவதை தவிர்த்திருக்கலாம். பத்மப்பிரியாவுக்கு இது முதல் படம் என்பதால் இன்னும் இரண்டு மூன்று திரைப்படங்களுக்கு பின்னர் விமர்சிக்கலாம்.

மேலும் படத்தில் வரும் ஏனைய சிறு பாத்திரங்களான மூத்தமகனின் மனைவி, ராஜ்கிரணின் உதவியாளராக வரும் இளவரசு என அனைவரும் சிறிது நேரம்தான் வந்தாலும் நாம் நேரில் பார்த்த/பார்க்கும் சில மனிதர்களை நினைவு கூறுவதால் மனதிலே பதிகிறார்கள்



இசை படத்துக்கு முக்கிய உதவியாக இருந்திருக்கிறது. பாடல்களிலும் , பின்னணி இசையிலும் தேவா சகோதரர்கள் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர்களை போல் பின்னி எடுத்திருக்கிறார்கள். இந்த பாடலில் வரும் அந்த இசை, அந்த படத்தில் வரும் முதல் பாடலில் வரும் இரண்டாம் சரணம், மூன்றாவது காட்சியின் பிண்ணனியின் இடையில் வரும் இசை என்பது போன்ற ஆராய்ச்சிக்கெல்லாம் நான் வரவில்லை. பாடல்களும், பின்னணி இசையும் படம் பார்க்கும் ரசிகனுக்கு அலுப்பை தட்டாமல் மேலும் கதையோடு ஒன்றிணைப்பதுதான் நல்ல திரையிசையென்றால் இந்த படத்தின் இசையும் அந்த வகைதான். முழுக்க முழுக்க தமிழிலேயே பாடல்கள் அதுவும் கதையையொட்டிய பாடல்கள் என்பது கதைக்கு பெரிய பலமாயிருக்கிறது. என்ன பார்க்கிறாய், ஒரெயோரு ஊருக்குள்ளே அடிக்கடி சன் மியுசிக்கில் பார்க்கலாம். அதேபோல தீம்மியூசிக்.. காட்சியில் உள்ள மகிழ்ச்சியை ரசிகனுக்கு எளிதாய் ஏற்படுத்துகிறது. உன்னை சரணடைந்தேன் பாடல் திரைப்படத்தில் ஆண்குரலில் வருவது எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தம். CDயிலிருந்த பெண்குரல் இன்னும் சிறப்பாக இருந்தது. எம்.எஸ்.பிரபுவின் கேமரா மற்றொரு பலம்.

டூரிங் டாக்கிஸாக இருந்து தவமாய் தவமிருந்துவாக மாறிய சேரனின் இந்தப்படைப்பும் வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து மாறுபட்டிருப்பது உண்மை. வருகிற பெருவாரியான மசாலா படங்களுக்கு மத்தியில் கதையையும் நம்பி படமெடுக்கும் ஒரு சில இயக்குனர்களில் தானும் ஒருவர் என்பதை சேரன் மற்றொரு முறை நிருபித்திருக்கிறார். நிறைய இடங்களில் காட்சிகளின் கால ஒட்டத்தை சொல்லும் சின்ன சின்ன விசயங்களில் அதிக கவனமெடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு 1970ல் தொடங்கும் கதையில் 1991 ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட காலத்தில் மூத்த மகன் படிப்பை முடித்து வேலைக்கு செல்வது, சென்னையில் சேரன் தங்கியிருக்கும் குடியிருப்பில் ஒரு காட்சியில் பின்னணியில் ஓடும் தூர்தர்சனின் செய்தியின் அந்தக்கால இசை, செய்தி வாசிப்பாளரின் குரல், ராஜ்கிரணுக்கும் சரண்யாவுக்குமான மேக்கப், உடை என பல இடங்கள். என்னபார்க்கிறாய் பாடலில் இளமைமீறும் மழைகாட்சிகள் வேறு ஒரு இயக்குனரிடம் சிக்கியிருந்தால் என்னாவாயிருக்கும் என்ற பயத்தை தருவது சேரனின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையயும் அதை காப்பாற்றி படம் முழுவதும் ஆங்காங்கே முத்திரை பதிக்கும் இயக்குனர் சேரன் மீண்டும் ஜெயித்திருக்கிறார்.

ஆனால் நான் இந்த விமர்சனத்தில் எதனை எடுக்க எதனை விடுக்க எனத்தெரியாமல் திண்டாடி பதிவு இவ்வளவு பெரிதானதை போல இயக்குனருக்கும் எதனை எடுக்க எதனை விடுக்க எனத்தெரியாமல் காட்சிகள் மிக நீளமாகி விடுகின்றது. அதேபோல் பல காட்சிகள் இன்னும் விஷுவலாக மிக எளிதாக சொல்வதை விட்டு வசனத்தால் நிரப்பியதால் மெகா சீரியல் வாடை ஆங்காங்கே அடிப்பது நிஜம். ஆட்டோகிராப் வெற்றி தந்த தெம்பில் இன்னும் யதார்த்தத்தோடு ஒட்ட முயற்சித்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுருக்கிறார். ஆனால் படத்தின் நீளமும் , காட்சியமைப்புகளில் மெகா சீரியல் போல அனைத்து விஷயங்களையும் சொல்ல முயற்சித்திருப்பதும், சில சமயம் ஒரு குறிப்பிட்ட Class மக்களுக்கு மட்டுமே வெற்றிகரமாய் போய்ச்சேரும் ஆபத்துமிருப்பதால் வசூலில் வெற்றி பொறுத்திருந்தால்தான் தெரியும்...

பலம்:

1. அனைத்து நடிகர்களும் பாத்திரமாய் வாழ்ந்திருப்பது (குறிப்பாய் ராஜ்கிரண்)
2. இசை மற்றும் கேமரா
3. சேரன்

பலவீனம்:

1. படத்தின் நீளம்
2. ஓவர் சென்டிமென்டாக தெரிவது
3. கவலையை மறக்க திரையரங்கிற்கு வருபவர்களுக்கான படமாக இல்லாதது.

மொத்தத்தில் ,

தவமாய் தவமிருந்து -- வரம் , தமிழ் சினிமாவுக்கும் நல்ல ரசிகர்களுக்கும்

Monday, December 05, 2005

தவமாய் தவமிருந்து --- ஒரு நீண்ண்ட விமர்சனம்

பொதுவாக தாயையும் தாய்ப்பாசத்தையும் மையமாக கொண்டு தமிழ் திரையுலகில் ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கிறது.ஆனால் தந்தை பாத்திரங்கள் பொதுவாக கதாநாயகிகளின் பணக்கார தந்தையாகயிருந்து ஏழை கதாநாயகனின் வெள்ளை மனதை புரிந்து கொள்ளாமல் அவரின் காதலை எதிர்த்து, அடியாள்கள் எல்லாம் அனுப்பி, இறுதியில் அடிவாங்கியபின் மனம்திருந்தி, கதாநாயகன் கதாநாயகியின் கையை ஒன்று சேர்த்து ஆனந்த கண்ணீர் வடிக்கும் ரகமாகவோ, இல்லை ஊர்சுற்றி, நண்பர்கள் குழாமுடன் சேர்ந்து கதாநாயகியை கிண்டலடித்து, காதலித்து, இடைப்பட்ட நேரத்தில் உள்ளூர் ரவுடியிடம் மோதி ஜெயித்து, இறுதிக்காட்சியில் ஒரு ஐ.ஏ.எஸ்ஸோ, ஐ.பி.எஸ்ஸோ ஆகும் தகுதி படைத்த கதாநாயகனின் மேன்மை தெரியாமல் அவரை திட்டி தீர்த்து விட்டு, இறுதிக்காட்சியில் கண்கலங்கி மன்னிப்பு கேட்கும் ரகமாகவோ ,இல்லை ஊரெங்குமே பார்க்கையிலாத ஒரு வகை பேக்கு மாதிரியான அப்பாவி ரகமாகவோ என்று சில புகழ் பெற்ற பார்முலாவில் பார்த்து பழகியவர்களுக்கு தவமாய் தவமிருந்தில் வரும் தந்தையின் பாத்திரமும், தாயின் பாத்திரமும் நிச்சயம் வியப்பைத்தரும்.

பக்கத்து டவுணில் அச்சகம் நடத்தி வரும் ஒரு தந்தை , ஒரு தாய், அவர்களின் இரு ஆண் குழந்தைகள் என இவர்கள் நால்வரின் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளே கதை. அந்த பெற்றோர் மற்றும் அந்த இரு பிள்ளைகளின் பள்ளி பருவம் , கல்லூரி பருவம், குடும்ப வாழ்க்கை என இந்த மூன்று காலகட்டங்களில் அவர்களின் உணர்ச்சிகள் குணாதியங்கள் என கதை வழக்கமான தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. இந்த கதையில் வரும் சம்பவங்களில் பல உங்கள் வீட்டில் பார்த்திருப்பதற்கோ இல்லை உங்கள் நண்பர்களின் வீட்டில் நடைபெற்றதை கேட்டிருப்பதற்கோ வாய்ப்புகள் அதிகமாயிருப்பதால் கதையுடன் நீங்கள் ஒன்றி போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


கதைக்களம் 1970ல் தொடங்குகிறது. படம் தன் தந்தையின் உடல்நிலை குறைவையறிந்து அவரை பார்க்க காரில் செல்லும் ஒரு மகனின் நினைவலைகளோடு தொடங்குகிறது ....

சொந்தமாக அச்சகம் நடத்திவரும் ராஜ்கிரணுக்கும் அவர் துணைவி சரண்யாவிற்கும் தங்கள் இரு குழந்தைகளின் மேல் அபார பிரியம். தன் தந்தையின் நினைவாக இரு குழந்தைகளுக்கும் ராமநாதன், ராமலிங்கம் என பெயரிடுகிறார் ராஜ்கிரண். தன் குழந்தைகளின் கல்வியைக்கருதி அருகிலுள்ள நகரத்திலுள்ள பெரிய பள்ளியில் கடன் வாங்கி சேர்க்கிறார்கள். மதிப்பெண் குறைவாக பெற்ற மூத்த மகனை பாலிடெக்னிக்கிலும் இளைய மகனை இஞ்சினியரிங் காலேஜிலும் (மீண்டும் மீண்டும்) கடன் வாங்கி சேர்க்கிறார்கள். படிப்பை முடித்த மூத்த மகனை பழைய ஆசிரியர் ஒருவரின் சிபாரிசோடு அருகிலுள்ள தொழிற்சாலையில் தன் அச்சகத்தை அடமானம் செய்து 50000 ரூபாய் முன்பணத்தோடு சேர்க்கிறார் ராஜ்கிரண். விபசார விடுதிக்கு மகன் சென்றதை கேள்வியுற்று அவனுக்கு உடனே திருமணம் ஏற்பாடு செய்து வைக்கிறார்கள். இதற்கிடையே காலேஜில் தன்னுடன் படிக்கும் சக மாணவியை காதலிக்கிறார் இரண்டாவது மகன்.

மூத்த மருமகளுடன் ஏற்படும் சிறு சிறு உரசல்கள், மனைவியின் சொல் கேட்கும் மூத்த பிள்ளை , மூத்த மகன் தாய் தந்தையை உதறி விட்டு தனிக்குடித்தனம் போகும் நிலையேற்படுகிறது. இடையே பருவ கோளற்றினால் இளையமகனின் காதலி கர்ப்பம் தரிக்க படிப்பை முடிக்கும் இளையமகன் தாய் தந்தையிடம் சொல்லும் திராணியற்று காதலியுடன் சென்னை பயணிக்கிறார். சென்னையில் வேலை இல்லாமல் , கையில் பணமில்லாமல் நண்பர்களின் உதவியை எதிர்பார்த்து, வாழ்க்கையின் இன்னல்களை பாடமாக கற்கும் அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பிறந்த சேதி கேட்டு சென்னை வரும் தந்தை மகன் பணத்திற்காக திண்டாடுவதை அறிந்து பணம் கொடுத்து விட்டு ஊர் திரும்புகிறார். சிறிதொரு நாட்களிலே பாசத்திற்கு ஏங்கி, சென்னையில் பிழைக்க வழி தெரியாமல் தன் மனைவியுடன் ஊர் திரும்புகிறார் இளையமகன் .

முதலில் மகனை வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கும் தாய் பின் சிறு குழந்தையின் அழுகுரலில் கலங்கி வீட்டிற்குள் அனுமதிக்கிறார். ஊர் திரும்பிய சிறு தினங்களிலே நல்ல வேலை கிடைத்து வாழ்வில் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறும் இளையமகன் தந்தை தனிக்குடித்தனம் போகச்சொல்லுவதை மறுத்து தாயும் தந்தையும் இறுதிவரை மகிழ்ச்சியுடன் இருப்பதே தனக்கு மகிழ்ச்சி எனக்கூறி அவர்களுடனே வாழ்கிறார். இரண்டு குழந்தைகளை பெற்று மதுரையில் புதிய பெரிய வீடு வாங்கும் இளைய மகன் தன் பெற்றோரையும் அவனுடனே அழைத்து சென்று அவர்களின் நலத்தில் அதிக அக்கறை செலுத்துகிறான். அவன் துணைவியும் அவனுடன் கருத்தொற்றிருக்கிறார். மகிழ்ச்சியாய் செல்லும் அவர்கள் வாழ்வில் தாய் சரண்யா இயற்கை மரணமடைய தன்னுடன் இவ்வளவு காலம் உறுதுணையாயிருந்த துணைவியின் பிரிவு தாளாமல் அவள் நினைவாக தாங்கள் வாழ்ந்த வீட்டிலேயே தான் வாழ்நாளின் இறுதியை கழிக்க விரும்பும் ராஜ்கிரணின் மன நிலையின் உண்மையறிந்து அவ்வாறே செய்கின்றனர்.

ஆனால் தன் தம்பி வளமாக வாழ்வதாகவும் தான் மட்டும் குடும்ப பாரத்தில் வருத்தப்படுவதாகவும் தனக்கு மட்டும் வாழ்க்கையை சரியாக அமைக்காமல் விட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டிய மூத்த மகனின் சொல் பொறுக்காமல் கலங்கும் தந்தை வயல்வெளியில் தவறி பின்னந்தலையில் அடிபட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்படுகிறார். இத்துடன் இளைய மகனின் நினைவலைகள் முடிவுறுகிறது. மருத்துவமனையில் தன்னை சந்திக்கும் இளைய மகனிடம் அவனுக்கு ஏதேனும் குறை செய்ததாக கேட்க தன்னை வளமாக வைத்திருப்பதாகவும் தன்னுடைய இந்த நிலைக்கு தன் தந்தையின் உழைப்பே காரணம் எனக்கேட்டு தன் மூச்சை விடுகிறார்.

தந்தையின் மரணத்திற்கு பின் இளைய மகன் தனக்கு தன் சகோதரனை விட்டால் இவ்வுலகில் வேறு சொந்தமில்லை எனக்கூறி அவன் மற்றும் அவன் குடும்ப தேவைகளனைத்தையும் தான் நிவர்த்தி செய்வதாக, அவர்களின் தாய் தந்தை வாழ்ந்த அந்த வீட்டை நினைவிடமாக்கும் எண்ணத்தை சொல்ல அதைகேட்கும் மூத்த மகனும் வருந்த , அவர்களின் குழந்தைகள் தன் தாத்தாவின் வாழ்க்கையை படிப்பதோடு படம் நிறைவுறுகிறது.

உண்மையிலேயே கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் வித்தியாசமாய் ஒரு குடும்பத்தின் சுக துக்கங்களில் கலந்து கொள்வது போன்ற ஒரு அனுபவத்தை ஏற்படுத்துவது நிஜம். ரஜினியின் ஆறிலிருந்து அறுபதுவரையின் கதைக்கருவை ஒட்டி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சிலருக்கு உணர்ச்சிகாவியமாய், சிலருக்கு மெகாசீரியலாய், சிலருக்கு கலைப்படமாய் தோன்றலாம். ஆனால் மசாலாவும் , அடிதடியும், குத்துப்பாடலும் , கத்தல் வசனங்களும் நிறைந்த தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி என்பதில் மாற்றமில்லை.

கதை பற்றிய விமர்சனமே இவ்வளவு பெரிய்யயயயயய கட்டுரையாய் வரும்போது திரைப்படம் எவ்வாறிருக்கும், அதன் மற்ற பலங்கள் பலவீனங்கள் குறித்து நாளை ...

-- தொடரும்

( பி.கு: நான் முன்னரே கூறியது போல திரைப்படம் வெளிவந்த அன்றே அதன் விமர்சனத்தை பதிவு செய்ய இயலாமல் மழை தடுத்து விட்டது. ஆனாலும் ஒரு திரைப்பட விமர்சனத்திற்கு உலக, இந்திய, தமிழ் வலைப்பதிவுலகில் தொடரும் போடப்படுவது இதுதான் முதன் முறை என்று நினைக்கிறேன் )

Thursday, December 01, 2005

சச்சின் .... கிரிக்கெட்... இந்தியாடைம்ஸ்....

சச்சின் ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து விலக வேண்டும், டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்ற தலைப்பை ஆர்வமுடன் கிளிக்கினால் ஒரு நல்ல நகைச்சுவை கட்டுரை படித்த முழு திருப்தி கிடைத்ததென்னவோ உண்மை. பொதுவாக தனிநபர் குறித்த கட்டுரைகளில் புகழ் வேண்டுமென நினைத்து விட்டால் அளவுக்கு அதிகமாய் புகழ்வதும், குறை கூற வேண்டுமென தீர்மானித்து விட்டால் அந்த நபரின் சோதனையான காலகட்டங்களில் நிகழ்ந்த அனைத்து நிகழ்வுகளையும் பட்டியலிடுவதும் வழக்கமான பாணிதான் என்றாலும் , இந்த கட்டுரையில் அந்த நடைமுறை கூட முழுமையாக பின்பற்றபடவில்லை என்பது ஆச்சரியமான விஷயமே.

சச்சினின் சமீப கால ஆட்டங்களில் , அவரின் அணுகுமுறையில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருப்பதும் ,இலங்கை தொடரில் சில ஆட்டங்களை தவிர்த்து ஏனைய ஆட்டங்களில் ஒருவித தற்காப்பு ஆட்டமுறையில் ஆடமுற்பட்டு அதில் தோல்வியை கண்டதும் உண்மை. சச்சின் போன்ற குறிப்பிட்ட சில ஆட்டக்காரர்கள் எதிர் அணியை எளிதில் நிலைகொள்ள செய்யும் தன்மையுடயவர்கள் என்பதும், அவர்கள் களத்தில் இருந்து விரைவாக வெளியேறுவது என்பது அவர்கள் சார்ந்த அணியின் பலத்தை உடனே குறைத்துவிடும் என்பதும் சமீபத்தில் கூட தென்னாப்பிரிக்கா தொடருக்கு முன் ஸ்மித் அளித்த பேட்டியிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.


ஒரு பேட்ஸ்மேனின் பொற்காலமென்பது அவருக்கு எதிராக ஆடும் அணியினர் அவரின் ரன் விகிதத்தை கட்டுபடுத்துவதிலேயே கவனமாயிருப்பதும், அவருக்கு எதிரான புதிய பரிசோதனைகளை தவிர்க்க முற்படுவதிலிருந்தும், அது போல் ஒரு பந்து வீச்சாளரின் திறன் அவருக்கு எதிரான அணியினர் அவரிடம் விக்கெட்டை இழப்பதை தவிர்ப்பதில் கவனம் கொள்வதிலிருந்துமே தெரிந்துகொள்ளலாம். சச்சின் ஒருதின போட்டிகளிலும் டெஸ்ட் போட்டிகளிலும் இன்னும் எதிர் அணிக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கிறார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு கட்டுரை வந்தது எனக்கு ஆச்சரியத்தையே தந்தது. லாரவுடன் சச்சினை ஒப்பிட்டு ஆங்காங்கே தன் கட்டுரையில் குற்றசாட்டை நிகழ்த்தியிருக்கிறார் கட்டுரையாளர். இரண்டு வெவ்வேறு அணியின் ஆட்டக்காரர்களை ஒப்பிடுவதில்,ஏன் ஒரே அணியில் ஆடும் வெவ்வேறு ஆட்டக்காரர்களை ஒப்பிடுவதில் கூட எனக்கு உடன்பாடில்லை, என்றாலும் கட்டுரையாளருக்கே அதிக எண்ணிக்கையான இரட்டை சதங்களைத் தவிர லாரா சச்சினை விட சிறந்த வீரர் என்பதற்கு சான்றுகளில்லை. சராசரி எண்ணிக்கையில் ஒப்பிட நினைத்து பின்பு அதுவும் இயலாததால் ஏதேதோ கூறி சமாளித்திருக்கிறார்.

கட்டுரையில் கூறப்பட்டு நான் ஆமோதிக்கும் ஒரே முக்கிய குற்றச்சாட்டு இறுதி ஆட்டங்களில் சச்சின் சரியாக ஆடுவதில்லை. அதே போல் டெஸ்ட் மேட்ச்களிலும் இரண்டாவது இன்னிங்சில் சச்சினுடைய சராசரி முதல் இன்னிங்ஸை விட குறைவாகவே இருக்கிறது.

இறுதிவரையில் எனக்கு புலப்படாத விஷயம், என்ன காரணத்திற்காக, கட்டுரையாளர் சச்சினை ஒருதின போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவேன்டுமென தலைப்பிட்டார் என்பதே !!!

ஆனால் அவ்வப்போது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுவதும் சச்சின் ஏதேனும் சாதனை புரிந்தவுடன், பக்கம்பக்கமாய் புகழ்வதும் இங்கு வழக்கமாய் நடைபெறும் ஒன்று என்பதால் சச்சினின் அடுத்த சாதனையை எதிர் நோக்குவோம்.

மேலும் சென்னை சேப்பாக்கம் டெஸ்டை பொறுத்தளவில் சச்சினுக்கு எப்பொழுதுமே மிகவும் ராசியானதாகவே அமைந்துள்ளது. இதுவரையில் ஆறு போட்டிகளிலாடி 714 ரன்களை 102.00 என்ற சராசரியில் குவித்திருக்கிறார். இதில் 4 சதங்களும் 1 அரை சதமும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இதுவரை அதிகபட்ச எண்ணிக்கையான 34 சதங்களை ஒரு சதமடித்து தாண்டுவரென நம்பலாம்.